அமெரிக்கா வந்த புதிது. நான் அப்போது சுத்த சைவம் . வந்து சேர்ந்த ஊரில் நானும் எனக்கு ஒரு வாரம் முன்னாடி எனது அலுவலகம் மூலமாகவே இங்கு வேலை கிடைத்து வந்திருந்த ஒரு ஆந்திரா நண்பரும் ஒரு Apartment ல ஷேர் பண்ணி தங்கி இருந்தோம். நமக்கு ஆங்கில புலமையும் கம்மி.
காலேசுல கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞினியரிங் படிச்சாலும் ஆங்கில கம்யூனிகேசன் ரொம்ப தடுமாறும். இருக்காதா பின்னே? காலேஜ்ல லெக்சரரே "அந்த நம்பர் இந்த variable வழியா போயி, அந்த Array இருக்க ஒரு இடத்துல சேரும் ம்னு ..." பாடம் நடத்துவார்.
அடுத்து வேலை சென்னைல டிரைனியா. , Knowledge Transfer, kick off, Scrum நு எல்லா மீடிங்க்ள கூட்டதோட கோவிந்தா போட்றதோடு சரி. என்ன problem வந்தாலும் ப்ராஜெக்ட் மேனேஜர், Team Leader yodu சரி. நமக்கு பேச வாய்ப்பே கிடைக்காது. கிடைச்சாலும் போன்ல அந்த பய புள்ளக என்ன பேசுதுன்னு ஒண்ணும் விளங்காது. இந்த லட்சணத்துல அமெரிக்கா வரதுக்காக இன்டர்வியூ பண்ணினவர் நம்மூரு காரரு ஒருத்தருங்கறதால எப்படியோ சமாளிச்சாச்சு. டெக்னிகலா பேசுறதெல்லாம் புரியும். மத்ததெல்லாம் சும்மா இடமும் வலமுமா தலை அசைச்சோ இல்ல, மையமா ஒரு அசட்டு புன்னகைலயோ சமாளிக்கிறது தான்.
அது நாள் வரை அம்மா சமையல், காலேஜ் ஹாஸ்டல் மெஸ், அல்லது ரோட்டோர புரோட்டாக்கடை, சென்னையில் பணி புரிந்த போது திரும்ப மெஸ் என சாப்பாடு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. அதனால் சமையல் பற்றி எல்லாம் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஒரு வழியாக முதல் நாள் ஏதோ பிரட், ஜாம் சாப்பிட்டு ஓட்டி விட்டேன். அன்று இரவே அம்மாக்கு போன் போட்டு குக்கரில் சாதம் எப்படி வைப்பது என தெரிந்து கொண்டு வெற்றிகரமாக சாதம் வைத்தாகி விட்டது. என்னத்தை ஊற்றிச் சாப்பிட? வெறும் சோறை எப்படி தின்பது? அப்பத்தான் நம்ம ஆந்திரா நண்பர் ஒரு ஐடியா சொன்னார். பக்கத்துல இருக்க கடைக்கு போய் தயிர் மட்டும் வாங்கி வருவோம். எங்கிட்ட கொஞ்சம் சாதப் பொடி, ஊறுகாய் இருக்குன்னார். கடை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வீட்டுல இருந்து. அப்பத்தான் அமெரிக்கா வந்திருந்ததால காரெல்லாம் கிடையாது. நட ராஜா சர்வீசு தான்.
சரின்னு கடைக்கு போய் தேடு தேடுன்னு தேடினோம் தயிர. ம்ஹீம். அகப்படல. தயிர இங்கிலீசுல கர்டு(Curd)ன்னு தான சொல்லுவோம்னு அங்க வேலை பார்க்கிற ஒரு பொண்னு கிட்ட போயி கேட்டும் பார்த்தோம். அது முழிச்ச முழிய பாத்தா கர்டுன்னா இந்தூருல ஏதோ கெட்ட வார்த்தையாட்டம் இருக்குன்னு நெனச்சுகிட்டு என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு திகைச்சு போய் நின்னோம். ஒண்ணும் விளங்கல. சரி நமக்கு இந்த ஊருல தெரிஞ்ச ஒரே ஆபத்பந்தவனு "கூகிள்" மட்டும் தான் வேற யாருமமிலநு . திரும்பி வீட்டுக்கு. வந்து ஒரு வழிய சர்ச் பண்ணுன . இந்தூருல தயிர கர்டுன்னு சொல்ல மாட்டாங்க. கடைல போயி யோகர்ட்டுன்னு தேடுன்னாங்க. -கூகிள் அய்யா வழிகாட்டுனர்.
சரி திரும்ப நடைய கட்டு கடைக்கு. இப்பவே மணி 8 ஆச்சு. ஊதக் காத்தடிக்குது. குளிரு வெடவெடங்குது. பசி வேற. ஒரு வழியா அடிச்சி பிடிச்சு கடைல போயி யோகர்ட்டுனு தேடி ஒரு டப்பாவ தூக்கி கிட்டு கையோட ஒரு பாக்கட் சிப்ஸ் வாங்கிகிட்டு வந்தாச்சி. இப்ப மணி 9 ஆச்சு. இருட்டு. குளிரு, பசி. வீட்டுக்கு வரதுக்குள்ள உடெம்பெல்லாம் வெறச்சி போச்சி. அதீத பசில கண்ணு கட்டுது. அத்தோட இந்த கர்ட், யோகர்ட், தயிரு குழப்ப டென்சன மறக்க வெறும் வயித்துல அடிச்ச ரெண்டு மூணு தம்மு வேற.
ஆவலா வந்து இருக்குற சோத்த அப்படியே ரெண்டா வகுந்து ஆளுக்கொரு தட்டுல சோத்த போட்டு நல்லா தயிர ஊத்தி பெசஞ்சாச்சு. தயிர அப்படியே பாக்க கெட்டியா நம்மூரு எருமைத் தயிரு மாதிரி இருக்க, கொஞ்சம் ஜாஸ்தியாவே விட்டு நல்லா பெசஞ்சி பக்கத்துல ஊறுகாய் வச்சிகிட்டு எடுத்து வாயில வச்சா....
வாந்தியே வந்துரும் போல ஆயிருச்சு. ஒரே இனிப்பு. ஒண்னும் விளங்கல எங்களுக்கு. என்னத்த பண்ண? சோறும் மிச்சமில்லை. எல்லா சோத்தையும் போட்டு பெசஞ்சாச்சு. எனக்கான அழுகை கண்ண முட்டுது. விதியேன்னு எல்லாம் எடுத்து குப்பைல போட்டுட்டு வெறும் சிப்சும் தண்ணியும் குடிச்சிட்டு படுத்துட்டோம். மறு நாள் ஆபீசுல போய் அந்த காலேஜு பய புள்ளகள ஏண்டா இந்த ஊரு தயிரு இப்படி இனிக்குதுன்னா அவனுங்க இடி இடின்னு சிரிக்கிறானுங்க. நீங்க பிளைன் யோகர்ட் பாத்து வாங்கணும்டா. ஏதாச்சும் பிளேவர் யோகர்ட் வாங்கி இருப்பீங்கன்னு. அப்பறம் கடைல போயி பாத்தா தான் தெரியும் இந்தூரு பக்கிக ஸ்ட்ராபரி, ராஸ்பெரின்னு என்னென்ன பழம் இருக்கோ எல்லாத்தையும் தயிர்ல கலந்து வச்சிருக்குகன்னும் நாங்க அன்னிக்கு ராத்திரி வாங்கி வந்தது வெனிலா யோகர்ட்டுன்னும்.
1 comment:
nice!
Post a Comment